Thursday, November 19, 2009

செய்திகள் சில

* மற்ற இடங்களில் எப்படியோ நம்ம ஊரில் கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் சரியான அளவு மழை பெய்திருக்கிறது

* மழைக்கு முன் 70 அடி அமராவதி அணையில் 28 அடி தண்ணீர் இருந்தது. 6 நாளில் அணை நிரம்பி இப்போது பார்ப்பதற்கு கண்கொள்ள காட்சியாக இருக்கிறது

* இனி ஒரு 6 மாத காலத்திற்கு விவசாயத்திற்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது

* ஆனால் திருமூர்த்தி அணையில் கதையே வேறு. இந்த அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறைவு. அதனால் மற்ற பகுதி மற்றும் அழியாறு அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக வந்தால்தான் அணைக்கு தண்ணீர். காண்டூர் கால்வாயில் ஒரு இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் (என்னது நம்ம ஊரிலும் நிலச்சரிவா??) பாறை விழுந்து கால்வாய் ஒரு பக்கம் வாயைப்பிளந்தது. அதனால் திருமூர்த்தி அணைக்கு நீர் வரத்து குறைவு (குறைவு என்ன வரத்தே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்). கால்வாய் சரி செய்ததும் அணை நிரம்ப வாய்ப்பிருக்கிறது.

* மற்றபடி மழையினால் பாதிப்பு என்று சொல்லும்படி ஏதும் நடக்கவில்லை.

* நம்ம ஏரியா விவசாயிகள் உப்பு விக்கப்போனால் மழை பெய்கிறது. மாவு விற்கப் போனால் காத்து அடிக்கிறது என்று புலம்பிக் கொண்டுயிருக்கிறார்கள்.
இதுதான் விசயம். போனதடவை ஊரே மக்காசோளம் நட்டார்கள். நட்டப்பட்டார்கள் (விளைச்சல் அதிகம் விலை குறைவு). உடனே எல்லோரும் ஒன்று கூடி மக்காசோளத்தை விட்டுவிட்டு தக்காளிக்கு மாறினார்கள். மாறவில்லை நஷ்டம் (அதே விளைச்சல் அதிகம் விலை குறைவு). இந்த வருடம் மக்காசோளம் விலை அதிகம். ஆனால் யாரும் நடவில்லை. தக்காளிக்கு காப்பு முடிந்தது. விலையும் அதிகரித்துள்ளது. இனி அனைவரும் ஒன்று கூடி பேசி எதை விதைத்து நஷ்டப்படலாம் என்று முடிவு செய்வார்கள். நம்மாளுகளின் ஒற்றுமை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த தடவை ஒரு பயிரின் விலை குறைந்தால் அதை எல்லாரும் அடுத்த தடவை தொட மாட்டார்கள். இன்னொரு குறை எல்லோரும் சொல்லிவைச்ச மாதிரி ஓரே பயிரைத் தான் நடவு செய்கிறார்கள். அதுவும் ஒரே நேரத்தில். சில அறிவு ஜீவிகள் எதிர்மறையாக செயல்பட்டு ஜாக்பாட் அடிக்கவும் செய்யத்தான் செய்கிறார்கள்.

*கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வாரே "வர வர இந்த தொழில்அதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா"ன்னு அந்த மாதிரி நம்ம ஊர் வர வர இந்த கார் வைச்சிருக்கவங்க தொல்லை தாங்க முடியல. அனைவருக்கும் கார் தேவை தான.் வைத்துக்கொள்ளலாம். அதற்காக நம்மாளுக பண்ணும் சேட்டை தாங்க முடியல. குண்டூசி என்றாலும் சரி பேனா பென்சில் வாங்க வேண்டுமென்றாலும் காரை எடுத்துக்கொண்டு தளி ரோட்டுக்கு வந்து விடுகிறார்கள். மாலை நேரத்தில் ரோட்டின் கிழக்கு பக்கம் முழுவதும் காராக்தான் இருக்கும்.கார் எடுத்து வருபவர்கள் பெரும்பாலும் நகரத்தில் வசிப்பவாகள் தான். நேற்று எங்கள் கடைக்கு வந்தவர் கார் நிறுத்த வசதியில்லை என்று குறைபட்டு கொண்டார். இதற்கும் அவர் வீடு சார்பதிவாளர் அலுவகத்திற்கு அருகில் இருக்கிறது. (கிட்டதட்ட அவர் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் கொஞ்சம் தூரத்தில் எங்கள் கடை தெரியும்)

*பல்லடம் - உடுமலை சாலை விரிவாக்கப்பணிகள் 33 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றுக் கொண்டுயிருக்கிறது.(கமிஷன் போக மிச்ச பணத்திலையாவது ஒழுங்கா ரோடு போடுங்க சாமி!!!)

* திண்டுக்கல் - கோவை சாலை 4 வழிப்பாதையாகிறது. மடத்துக்குளத்தில் சாலையேட்டி இருக்கும் கட்டிடங்களுக்கு 2010ல் காலிசெய்யச்சொல்லி நோட்டீஸ் கொடுத்து விட்டார்கள். ஆனால் உடுமலை நகரத்தில் ராகல்பாவிக்கு அருகில் இருந்து பைபாஸ் சாலை ஆர்கேஆர் பள்ளி அருகில் சென்று பின்பு பழனி ரோட்டில் ஏதே ஒரு இடத்தில் சேருகிறது. நகரத்தில் பழனி பொள்ளாச்சி சாலையோரம் இருக்கும் கடைகாரர்கள் தப்பித்துவிட்டார்கள்.

* பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரி நிகர்நிலை பல்கலைகழகமாக மாறப்போகிறது. (பொறியியல் கல்லூரி தவிர்த்து). பெயர் "பொள்ளாச்சி பல்கலைகழகம்" (உடுமலைப்பேட்டை செய்தினு பேர் வெச்சுட்டு உனக்கு எதுக்கு பக்கத்து ஊர் செய்தியெல்லாம்???)

Wednesday, November 4, 2009

slice of life @ udumalpet - 4

* சில நாட்களுக்கு முன் பள்ளபாளையம் அருகில் உள்ள மானுப்பட்டியில் நடந்த விழாவில் அமைச்சர் இலவச டிவியை மக்களுக்கு வழங்கினார். அதற்கு பதிலாக அவர் இலவச முகமுடிகளை வழங்கியிருக்கலாம். மக்களுக்கு பாதுகாப்பாகாவது இருக்கும். ஆமாங்க அங்க வைச்சு இங்க வைச்சு கடைசியில அடிமடியிலேயே கைவைச்சுட்டான்னு ஒரு பழமொழி மாதிரி அமெரிக்கவுல வந்து இந்தியாவுக்கு வந்து சென்னைக்கு வந்து கோவைக்கு வந்து கடைசியில நம்ம உடுமலைப்பேட்டைக்கும் வந்துவிட்டது பன்றிக் காய்ச்சல். தாராபுரம் ரோட்டில் உள்ள ஆர்.கே.ஆர் பள்ளி மாணவர்கள் 5 பேர்க்கு முதலில் வந்தது. சரியான தடுப்பு நடவடிக்கை எடுக்காததால் இதை எழுதிக் கொண்டுயிருக்கும் வரையில் 15 பேர்க்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதி 20 பேரின் டெஸ்ட் ரிசல்ட் வந்தால் தெரியும். தொலைபேசிய நண்பர்களிடம் கெத்தாக நம்ம ஊருக்கேல்லாம் வராது என்று சொல்லிய நான் இப்போது வடிவேலு ஸ்டைலில் "சிங்கத்தை சாச்சுப்புட்டாங்களே" னு கவலையோடு இதை டைப் செய்து கொண்டுயிருக்கிறேன்.

* வாட்டி எடுத்த வறட்சி கொஞ்சம் நீங்கியிருக்கிறது. ஓரளவு சுமாரான மழை பெய்திருக்கிறது நம்ம ஊரில். ஆனால் அமராவதியில் தண்ணீர் இல்லாததால் பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

* பஞ்சலிங்க அருவியில் நல்லா தண்ணீர் கொட்டுகிறது. இப்போது பாதுகாப்புக்கு கம்பிகள் உடை மாற்ற அறை என்று பல வசதிகள் செய்திருக்கிறார்கள் என்று பேப்பரில் படித்தேன். அடுத்த தடவ ஊருக்கு வரும்போது ஒரு தடவ அங்கேயும் ஒரு விசிட் அடிங்க...

* நீண்ட தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கிறது நம்ம ஏரியா வனத்துறை. கிட்ட தட்ட ஏழு டன் வெட்டப்பட்டு கடத்துவதற்கு தயாராக இருந்த சந்தன மரங்களை காட்டுக்குள் கைப்பற்றி இருக்கிறது வனத்துறை. அநேகமான இப்போது காட்டுக்குள் வெறும் சந்தன மரத்தின் வேர்கள் மட்டும் தான் பாக்கியிருக்கும் என்று தோன்றுகிறது அந்த அளவுக்கு கடத்தல்காரர்கள் விளையாடியிருக்கிறார்கள்.

விளம்பரம்: இது வரை தமிழ்ப் புத்தகங்களை மட்டும் உடுமலை.காமில் விற்று வந்த நான் சமீபத்தில் குறுந்தகடுகளையும் அதில் சேர்ந்து உள்ளேன். எப்போதும் போல் ஆதரவு தாருங்கள். இந்த நேரத்தில் நம்ம ஊர் வலைப்பதிவர்கள் நாகா(இந்த வார தமிழ்மண நட்சத்திரம்) செந்தில் வேலன் துக்ளக் மகேஷ் ஆகியோர்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ஆதவன் படத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் நீங்க எந்த ஊர் என்று கேட்கும் காட்சியிருக்கிறதாம். அதற்கு அவர் என் ஊர் உடுமலைப்பேட்டை என்று பதில் சொல்கிறாராம். பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்த படத்தை இந்த ஒரு காட்சிக்காகவே பார்க்க செல்லும் நேரத்தில் இந்த சிறு பதிவு

நன்றி

Monday, October 19, 2009

உடுமலைப்பேட்டை

நாணயம் விகடனின் வந்த கட்டுரை (நன்றி நாணயம் விகடன்)

''எங்க ஊரை 'ஏழைகளின் ஊட்டி'னு சொல்லுவாங்க... ஆளையே உசர தூக்கிட்டுப் போறமாதிரி காத்து, ஊரைச் சுத்தி மலைக, சில்லுனு எப்பவும் மோடம் போட்ட மாதிரி இருக்கற க்ளைமேட் இதுகதானுங்க அப்படிச் சொல்றதுக்குக் காரணம். இன்னிக்கு கம்ப்யூட்டர்ல கணக்குப் போட்டு பங்கு மார்க்கெட்ல பணத்தை இறக்குறாங்க. ஆனா 'ஆன்லைன்' இல்லாத காலத்துலயே போன்ல பேசியே பிஸினஸை டெவலப் செஞ்ச ஊருங்க எங்க ஊரு''னு உடுமலைப்பேட்டையிலருந்து வர்றவங்க சொல்லி அடிக்கடி கேட்டிருக்கேன்...'' அதெல்லாம் உதாறா, உண்மையானு தெரிஞ்சிக்கிடலாம்னு அங்கே விட்டேன் சவாரி...

உடுமலையைச் சுத்தியிருக்கற 64 கிராம மக்களை நம்பித்தான் இந்த ஊர் தொழில்கள் இருக்கு. அந்த 64 கிராம மக்களுக்கும் முக்கிய வருமானம் விவசாயம்தான்! குறிப்பா உடுமலை பகுதியில தென்னையும், வாழையும் அதிகம். முக்கியமான தொழில்னு பாத்தா... பிராய்லர் கோழி வளர்ப்பு, நூல் மில், கொப்பரை இவைகதானு டிபன் சாப்பிட்ட இடத்துலயே விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்.

சரி, நூல் மில்ல இருந்து ஆரம்பிக்கலாமுன்னு முடிவு பண்ணி, மில் யூனிட் வச்சிருக்கற காளிதாஸைப் போய்ப் பாத்தேன். என்னைப் பாத்ததுல அவருக்கு அம்புட்டு சந்தோசம். இந்த தொழிலைப் பத்திக் கேட்டதும் சும்மா திருமூர்த்தி அருவி கணக்கா கொட்ட ஆரம்பிச்சுட்டாரு.


''இங்க பெரிய ஸ்பின்னிங் மில்லுக இருந்தாலும், 'ஒப்பன் எண்ட் யூனிட்'னு சொல்ற எங்கள மாதிரி சின்ன யூனிட்டுகதானுங்க அதிகம். பெரிய மில்கள்ல வேஸ்டாகுற கழிவுப் பஞ்சுகளை வாங்கி அதுல நூலை தயாரிக்குறதுதான் எங்க தொழில். இப்படி கழிவுப் பஞ்சுல தயாராகுற நூலை வச்சுத்தான் போர்வை, பெட்ஷீட், காடா துணிகளைத் தயாரிக்குறாங்க. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள்ல மட்டும் 'ஓப்பன் எண்ட் யூனிட்'க 300-க்கும் மேல இருக்கு. அதுல அதிகமா இருக்கறது வெள்ளக்கோவிலிலயும், உடுமலையிலயுந்தான்.

இந்தத் தொழிலை நம்பி நேரடியாவும், மறைமுகமாவும் ரெண்டு லட்சம் குடும்பங்க பொழைச்சுக்கிட்டிருக்கு. நல்லா நடந்துக்கிட்டிருந்த இந்தத் தொழிலு, இப்ப கொஞ்ச நாளா தேக்கமா இருக்கு. பஞ்சு விலை கூடிப்போச்சு. இதைத் தாக்குப் பிடிக்க முடியாம பல யூனிட்களை மூடிட்டாங்க. அதனால அரசு உடனடியா எங்க தொழிலுக்குவாட், செஸ் வரியை ரத்து செய்யறதோட, கழிவுப் பஞ்சை ஏற்றுமதி செய்யறதையும் தடை செய்யணும்'' என்று கோரிக்கை வைத்தார்.

காளிதாஸூக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுட்டு நடையைக் கட்டுனேன். வழியில இருந்த ஒரு கொப்பரை களத்தைப் பாத்ததும் உள்ளே நுழைஞ்சிட்டேன். அங்க ஒரு பக்கம் தேங்காயை உரிக்குறதும், காய வக்கிறதுமா பிஸியா இருந்தாங்க. கொப்பரை களத்தோட பொறுப்பாளர் சீனிவாசன்கிட்ட பேசினேன்.

''இங்க தென்னை மரங்க ஜாஸ்தி. சில பேரு காயா விப்பாங்க. சிலரு கொப்பரையாக்கி விப்பாங்க. அப்படி கொப்பரையா விக்க நினைக்குற விவசாயிங்க எங்கள மாதிரி களம் வச்சிருக்கவங்ககிட்ட சொல்லிடுவாங்க. நாங்களே ஆளுகள வச்சி கொப்பரையாக்கி கொடுத் திடுவோம். அதை விவசாயிக விரும்புன இடத்துல வித்துக்குவாங்க. ஒரு சிலரு எங்களையே வித்து தரச் சொல்லுவாங்க. அவங்களுக்கு நாங்க வித்துக் கொடுத்துடுவோம். இதுல ஒளிவு, மறைவுக்கு வேலையே இல்லை. ஈரோடு மார்க்கெட் விலை எஸ்.எம்.எஸ்-ல வந்துடும். அந்த விலைக்கு உள்ளூர் வியாபாரிககிட்ட வித்துக் கொடுப்போம். எங்களுக்கு தேங்காயை ஒடைச்சு பருப்பெடுக்குறப்ப கிடைக்குற தொட்டிதான் (கொட்டாங்குச்சி) லாபம்.

இந்தத் தொட்டிக கார்பன் தயாரிக்குறதுக்குப் பயன்படுது. நாங்க தொட்டிகளை காங்கேயத்துக்கு அனுப்பிடுவோம். அங்கதான் இதை கார்பனா மாத்துற யூனிட்க இருக்கு. சில நேரத்துல கலைப்பொருட்களைச் செய்யறவங்களும் வந்து தொட்டிகளை வாங்கிட்டுப் போவாங்க. இன்னிக்கு நிலமைக்கு தொட்டி ஒரு டன் 3,300 ரூபாய்க்கு விக்குது. உடுமலையில எங்களை மாதிரி 40-க்கும் அதிகமான களங்க இருக்கு. ஐம்பது நாள் கழிச்சு எல்லாரும் சேர்த்து மொத்தம் 500 டன்னுக்கு மேல தொட்டிகளை அனுப்புறோம்'' என்றார்.

அடுத்ததா பிராய்லர் வளர்ப்பு பற்றி தெரிஞ்சுக்கு றதுக்காக 'வெங்கடேஸ்வரா ஹேட்சர் ஸ்கம்பெனி'க்காக முட்டைகளைத் தயாரிச்சுக் கொடுத்துக் கிட்டிருக்கற மகாலிங்கத்தைப் போய்ப் பாத்தேன்.

''இங்க பத்து விவசாயிக்கு ஒரு விவசாயி பிராய்லர் வளக்குற பண்ணை வச்சிருப்பாங்க. இதுக்கு ஆள் அதிகம் தேவைப்படாது. விவசாயத்தோட ஒட்டுன தொழில். கோழிகளோட எச்சத்தை நிலத்துக்கு உரமா போட்டுக்கலாம். அதனாலதான் விவசாயிக அதிகமா ஒப்பந்த முறையில பிராய்லர் வளர்க்குறதுல ஆர்வம் காட்டுறாங்க. கம்பெனிக் காரங்க குஞ்சுகளைக் கொடுத்துட்டு, 60 நாளைக்கு ஒரு தடவை எடுத்துக்குவாங்க. தீவனத்திலிருந்து எல்லாத்தையும் அவங்களே கொடுத்துட்டு, கிலோவுக்கு 3 ரூபா கொடுக்குறதால விவசாயிகளும் ஆர்வமா செய்யறாங்க.

நான் முட்டை உற்பத்தி செஞ்சு கொடுக்குறேன். இதுக்கு இன்வெஸ்ட்மென்ட் அதிகமாகும். அதோட கவனிப்பும் அதிகம் தேவைப்படுறதால ஒரு சிலர் மட்டுந்தான் முட்டை உற்பத்தி செய்யற பண்ணை வச்சிருக்காங்க. பிராய்லர் கோழி பண்ணைக மூலம் மட்டும் உடுமலையில வருசத்துக்கு சுமார் 50 கோடிக்கு மேல டேர்ன் ஓவர் ஆகுது. இப்ப இடையில கொஞ்ச நாளா பிராய்லர் ஃபீல்டு கொஞ்சம் டல்லா இருந்துச்சு. இப்ப மறுபடியும் நல்லாயிருக்கு'' என்றார்.

அடுத்ததா உடுமலை வியாபாரிகள் சங்கத் தலைவர் பால நாகமணியைப் பாத்து ஊரோட வியாபாரத்தைப் பத்திக் கேட்டேன்...

''வியாபாரம் முன்ன விட குறைஞ்சு போச்சு. இப்ப நகைக்கடையிலயும், துணிக்கடையிலயும்தான் ஓரளவுக்கு வியாபாரம் நல்லா இருக்கு. நாங்க மூணு தலைமுறையா பலசரக்கு கடை வச்சிருக்கோம். எங்க தாத்தா காலத்துல 12 தராசு எப்பவும் பிஸியாவே இருக்கும். இப்ப ரெண்டு தராசுக்கே வேலையைக் காணோம். விலைவாசி கூடுனதால, வழக்கமா வாங்குற அளவை விட குறைச்சலாத்தான் வாங்குறாங்க. மக்களும் சிக்கனமா செலவழிக்க ஆரம்பிச்சுட்டாங்க'' என்றார்.

இந்த ஊர் மக்கள் எப்படி சேமிக்குறாங்கனு 'ஷேர்கான்' நிறுவனத் தோட ஃப்ரான்ச்சைஸ் பொறுப்பாளர் சம்பத்கிட்ட கேட்டேன்.

''மக்கள்கிட்ட ஷேரைப் பத்துன விழிப்புணர்வு அதிகமாவே இருக்கு. ஆன்லைன் இல்லாத காலத்துல ஆஃப்லைன்லயே அதிக வியாபாரம் பண்ணது உடுமலைதான். ஷேர்ல மட்டுமில்லாம ரியல் எஸ்டேட், தங்கம், வங்கினு நாலு வகையிலயும் சமமா முதலீடு பண்றாங்க. இங்க மொத்தம் எட்டு புரோக்கிங் ஆபீஸ் இருக்கு. எல்லா ஆபீஸிலயும் சேத்து ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய்க்கு பிஸினஸ் நடக்குது'' என்றார்.

ல் எஸ்டேட் தொழிலும் இந்த ஊர்ல சக்கை போடு போட்டுக்கிட் டிருக்கு. இந்தப் பகுதியில வீசுற காத்துலயிருந்து மின்சாரம் தயாரிக் குறதுக்காக ஏகப்பட்ட விண்ட் மில்கள் வந்துக்கிட்டிருக்கு. நிலங்களோட விலை கூடுறதுக்கு அதுவும் ஒரு காரணம். ஊருக்கு தெக்க இருக்க திருமூர்த்தி மலைக்குப் போற சாலையும், கிழக்கே பழநி ரோடும் நல்லா டெவலப் ஆகிட்டு இருக்கு. 'பைபாஸ் ரோடு வந்தா... ஊரோடு வளர்ச்சி இன்னும் நல்லாயிருக்குமுன்'னு சொல்றாங்க.

கடைசியா, மனவளக் கலை மன்றம் வச்சிருக்கற பொன்னுசாமிகிட்ட ஊர் நிலவரத்தைக் கேட்டேன்.

''இந்த ஊரைச் சுத்தியும் சுற்றுலாதலங்கள் இருக்கு. திருமூர்த்தி அணை, அமராவதி அணை, ஆழியாறு, பழநினு எல்லாமே முப்பது கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளயே இருக்கு. அதைவிட இந்த ஊர்ல கல்வி ஸ்தாபனங்கள் தரமா இருக்கு. பல ஊர்களிலிருந்தும் தங்களோட பிள்ளைகளை இந்த ஊருலயிருக்கற பள்ளியில சேத்துப் படிக்க வைக்குறாங்க. புகழ் பெற்ற சைனிக் ஸ்கூலும் இங்கதான் இருக்கு. இந்த ஊர்ல ஏகப்பட்ட வேலைக இருக்கு. அதைச் செய்யறதுக்குத்தான் ஆளைக் காணோம். தினமும் இங்கிருந்து எட்டு பஸ்ல திருப்பூருக்கு வேலைக்கு ஆளுகளை ஏத்திக்கிட்டுப் போறாங்க. அதுனால உள்ளூர்ல எந்தத் தொழிலுக்கும் ஆளுக கிடைக்கிறதில்லை. திருமுர்த்தி அணை, அமராவதி அணைகளைச் சுற்றுலாதலமா அறிவிச்சு, ஊருக்கு ஒரு பைபாஸ் போட்டுட்டா... இன்னும் பல மடங்கு முன்னேறிடும் எங்க ஊரு'' என்றார்.

இந்த ஊரைப் பொறுத்தவரைக்கும் மக்கள் நல்ல உழைப்பாளிகளாகவும், சம்பாதிக்கத் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அதே நேரம் சமீபகாலமாகச் சம்பாதிக்கும் பணத்தைச் சேமிப்பதை விட, அனுபவிப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ஊர்களில் அதிகரித்து வரும் கார்களின் எண்ணிக்கையே இதை உறுதி செய்கிறது.

Wednesday, October 7, 2009

slice of life @ udumalpet - 3

நம்ம ஊர்க்காரங்களுக்கு 'கவுரவம்' ரொம்ப முக்கியம். என் கூடப் படிச்ச நண்பன் நித்தியனந்தன் தும்பலப்பட்டிகாரன். அவங்க பங்காளி (பெரியப்பா மகன்) நோம்பிக்கு கோயமுத்தூர்ல போய் துணி எடுத்துட்டு வந்து அவுங்க வீட்ல வந்து காட்டிட்டு போகும்போது 'ஏன் நித்தி நீ நம்ம ஊருல வேலவன்ல தானே துணி எடுப்பே' னு சொல்லிட்டு போய்ட்டான். இவனுக்கு வந்தே கோபம். அவன் என்ன அப்படி கேட்டுட்டு போய்ட்டான். நான் பாரு எங்க போய் துணி எடுக்கிறேன்னு என்னைய கூப்பிட்டான். என்னைய கூப்பிடும்போதா டிவில போத்தீஸ் விளம்பரம் போடனும்?. நாம நாளைக்கி மெட்ராசுக்கு போய் போத்தீஸ்ல துணி எடுத்தே ஆகனும்னு சொன்னான். பையன் டென்சனா இருக்கான்னு சொல்லிட்டு தாராளமாக போகலாம். இப்ப மதுரைலையும் போத்தீஸ் இருக்கு அங்க போலாம். அப்பறம் நேர்ல பேசலாம் சாயத்திரம் டவுனுக்கு வானு சொல்லிட்டு கட் பண்ணிட்டேன். சாயந்திரம் சந்தைக்கு போய் தக்காளி காசை வாங்கிட்டு ஓட்டை டீவிஸ்சை உருட்டிட்டு நம்ம கடைக்கு வந்தான். நான் கடையில் செல்வா கூட் பேசிட்டு இருந்தேன். பின்பு நானும் செல்வாவும் என்ன நடந்தது என்று கேட்டறிந்தோம். சரி துணிமணி எவ்வளவு எடுக்கனும்னு கேட்கேடன். ஒரு சட்டை ஒரு பேண்ட். சுமார் ஆயிரம் ருபாய் துணிக்காக ரெண்டாயிரம் செலவு பண்ணி (நாலு பேர் ஒரு நாள் காரில் போனால் ஆகும் செலவு) போகனுமா என்று கேட்டேன். லட்சம் ரூபாய் ஆனாலும் பரவாயில்லை நாம வெளியூர் போய்தான் எடுக்கனும். டேய் இது என் மானப் பிரச்சனை அதனால நீ வந்தே ஆகனும்னு சொன்னான். இடையே செல்வா வேறு ஒரு பிட்டைப் போட்டான். மதுரை கூட பக்கமா இருக்கு. கம்முனு திருநெல்வேலில இருக்கற RMKVக்கு போகலாம். ரொம்ப தூரமா போய் எடுத்த மாதிரியும் இருக்கும். நல்ல qualitya இருக்கும்னு சொல்லிட்டான். உடனே போத்தீலிருந்து ஆஎம்கேவிக்கு மாறிட்டான். அவனுடைய மானப்பிரச்சனைக்காக இந்த வாரம் ஞாயிற்றுகிழமை 5 பேர் 3000 செலவு பண்ணி ஆயிரம் ரூபாய்க்கு துணி எடுக்க காரில் திருநெல்வேலி போறோம். நீங்க வர்றீங்களா?


கொஞ்ச நாளுக்கு முன்னாடி கல்லூரியை விட்டு வந்த பசங்க ஒரு இருபது பேரிடம் இப்போது பிரபலமாக இருப்பது 'ஒளிஞ்சு விளையாட்டு'. நாம் சின்ன வயதில் விளையாடிய அதே விளையாட்டு தான். ஆனால் இப்போது நாடு கொஞ்சம் முன்னேறியிருப்பதால் அதே விளையாட்டு பைக்கில் விளையாடுகிறார்கள். ஆமாம் பைக்கில் தான். ஆவுட் ஆனவன் கால் மணி நேரத்துக்கு முன்னாடி கிளம்பி போவான். பின்னர் ஆறு அல்லது ஏழு வண்டிகளில் அந்த வண்டியைத் தேடி கிளம்புவார்கள். அவனை கண்டுபிடிக்கனும் இதுதான் விளையாட்டு. விதிகள். ஆறு வண்டிகளும் பல ஏரியாகளில் சுற்றும். ஆறு பேரும் conference இருப்பார்கள். கிட்டதட்ட 3 மணி நேரம் வண்டி நிக்காமல் சுற்ற வேண்டும். கிட்டதட்ட 3 மணி நேர விளையாட்டுக்கு பெட்ரோல் மற்றும் போன் பில் மட்டும் 3000 ரூபாய் ஆகிறதாம். ஆனால் ரொம்ப interesting ஆக இருக்கிறதாம். ஒரு நாள் நானும் கலந்துகிட்டு நம்ம காசையும் புகையாக்கனும்....

இது கிசுகிசு
நகரின் மிகப்பெரிய தொழில்அதிபர். அவரின் மனைவி நிர்வகிக்கும் பஞ்சு மில்லில் ஒரு ஆந்திரா வியாபாரியிடம் சுமார் 4 லட்சத்துக்கு பஞ்சு வாங்கியிருக்கிறார்கள். பஞ்சு வந்ததும் ஒரு பண்டலைப் பிரித்து பார்த்து நல்லாயிருக்கிறது என்று எண்ணி செக் போட்டு அவனுக்கு அனுப்பிவிட்டார்கள். சில நாட்கள் கழித்து மொத்ததையும் பிரித்துப் பார்த்தால் அத்தனையும் வேஸ்ட். மட்டரகம். உடனே பேக் பண்ணி அவனுக்கே திருப்பி அனுப்பி விட்டு செக்குக்கு stop payment கொடுத்து விட்டு அதை மறந்தே விட்டார்கள். அந்த ஆந்திரா காரன் செக்கை வங்கியில் செலுத்தி திருப்பி வந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தான். இவாகளுக்கு சம்மன் வந்ததது. ஆனால் இவங்க மில்லில் யாருக்கும் பணம் பாக்கி வைத்திருப்பதில்லை. செக்கும் பவுண்ஸ் ஆனதில்லை. அதனால் சம்மனை கீழ்மட்ட கிளர்க்கள் கண்டுக்காமல் விட்டு விட்டனர். கடைசியில் அந்த ஆந்திராகாரன் arrest warrant வாங்கிக் கொண்டு நம்வூர் காவல் நிலையத்தில் காசு கொடுத்து விவரம் வெளியே தெரியாமல் திடிரென்று ஒரு நாள் மதியம் அந்தம்மா மில்லீல் இருந்த வெளியே வரும் போது மப்டியில் இருந்த ஆந்திரா போலீஸ் அவரைப் தடுத்தது
அங்கே இருந்தவர்களுட்ன் ஆந்திரா போலிஸ்க்கும் கைகலப்பு ஆனது. பின்னர் அந்தம்மாவே நான் என் காரில் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்திற்கு வருகிறேன் என்றதும்தான் ஆந்திரா போலீஸ் அவரை விட்டது. இதற்குள் இந்த விசயம் நம்ம ஊரில் அனைத்து கோடிஸ்வரர்களுக்கும் பரவி அத்தனை பேரும் குட்டை போலீஸ் நிலையத்தில் குவிந்து விட்டனர். நம்ம ஊரில் உள்ள அத்தனை சொகுசு கார்களும் குட்டையில் அன்று பார்ததேன். சுமார் 30 கார்கள். எல்லா வகைகளும். குறைந்தப்பட்சம் sonata தான். Audi மட்டும் தென்படவில்லை. பின்னர் அந்தம்மா சொந்த ஜாமீனில் வெளிவந்தார். அத்தனை பெரிய கோடீஸ்வரர் வெறும் 4 லட்சத்துக்கு அதுவும் கவனக்குறைவால் இந்த சூழ்நிலைக்கு வந்ததுப்பற்றி மற்ற தொழில்அதிபர்களிடம் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை நாம் மாவட்ட தலைநகரம் என்று அழைப்பதை விட குற்றத்தலைநகரம் என்று அழைப்பதே சரியாக இருக்கும். அந்த அளவுக்கு நாளுக்கு நாள் கொலை கொள்ளை வழிப்பறி என்று பேப்பரில் செய்தி வந்துக் கொண்டே இருக்கிறது. கோவையில் pricol நிறுவனத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட பத்து தொழிலாளிகள் அலுவலகத்தில் புகுந்து அங்கு இருந்த Senior HR managerai கொன்றுவிட்டார்கள். சமீபத்தில் திருப்பூர்க்கு அருகில் சூதாட்டம் நடந்த இடத்தில 49 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தார்கள் என்று பேப்பரில் படித்தேன். அருகில் இருந்த நண்பன் சொன்னான். "கணக்கு காட்டினதே 49 லட்சம்னா அப்ப அங்க எவ்வளவு இருந்திருக்கும்?"

தேங்காய்க்கு ஒன்றும் கட்டுபடியாகாத விலை, வறட்சியால் ஒன்றும்பெரிதாக இல்லாத விவசாயம் என்று பல காரணங்களால் இந்த தீபாவளி ஒன்றும் பெரிதாக கலகலக்கவில்லை. பார்ப்போம் இன்னும் சில நாட்கள் இருக்கிறது.

இன்னும் விசயம் இருக்கிறது. ஆனால் டைப் அடிப்பதற்கு பொறுமை இல்லை. சில நாட்களுக்கு பிறகு பொழுதுபோகாத நேரத்தில் மற்றதை டைப் செய்து இங்கே தருகிறேன்

Monday, September 28, 2009

slice of life @ udumalpet - 2

நாய்க்கு வேலை இல்லை. நிற்க நேரமில்லைங்கிற பழமொழி மாதிரி பெருசா ஒண்ணும் பிரயோசனம் இல்லையென்றாலும் கொஞ்சம் நாளா வேலை அதிகம். ஜல்லிபட்டியில் கிடாவெட்டு, பாலப்பம்பட்டியில் ரேகளா ரேஸ், ஆண்டிப்பட்டியில் காட்டுயானைகள் வந்து சென்ற நண்பனின் தோட்டம் , கொழுமம்- ருத்திரபாளையத்தில் கோயில் திருவிழாங்கிற மாதிரியான வேலைகள் நிறைய வந்துவிடுகிறது....

-------------------------------------------------------------------------------------------
சில நாட்களுக்கு முன் மாலை நேரத்தில் அனுசம் தியேட்டரைத் தாண்டி அண்ணா சிலை அருகே வரும்போது ஒரு இருபது இரு சக்கர வாகனங்கள் அங்கே இருந்தன. மக்கள் கூட்டமாக நின்று வானத்தை பார்ததுக் கொண்டும் கைக்கடிகாரங்ளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டுயிருந்தனர். என்னாச்சு என்று அறிய சில நிமிடங்கள் பிடித்தது. ஒன்றுமில்லை. நம்ம ஊரில் சிக்னல் அன்றுதான் செயல்பட ஆரம்பித்து. அது எத்தனை நிமிடங்களுக்கு ஒரு தடவை பச்சை விழுகிறது என்பதையும் ஆராய்ந்து கொண்டுயிருந்தனர் நம் மக்கள். (பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ததமாதிரிங்கற பழமொழி ஞாபகம் வருதா உங்களுக்கு??)
ஆனால் ஒரு விதத்தில் நம்ம் ஊர்காரங்களை நினைத்து பெருமைகொள்ள வேண்டும். நம்ம போலீஸ் காலைல வந்து சிக்னல் ஆன் பண்ணி போனாங்கனா திரும்பவும் சாயந்திரம் தான் வர்றாங்க. ஆனாலும் நம்ம ஆளுக சிக்னலை மதித்து ஒழுங்க போறாங்க...சில லாரி காரங்களையும் சில பேருந்துகாரங்களையும் தவிர ('எப்படியும் வீதிக்கு ரெண்டு ஜாதிக்கு ரெண்டு விளங்காதவனுக இருப்பாங்க' என்ற பழமொழியைப் போல)

-------------------------------------------------------------------------------------------

மடத்துக்குளம் தாண்டி இருக்கும் புஷ்பத்தூர் (ஜெயம் படத்தில் ரவியின் ஊராக வரும் அதே புஷ்பத்தூர்தான்) அருகில் உள்ள ஒரு மில்லை கோல்ட் வின்னர் கம்பெனி விலைக்கு வாங்கி 50 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர். ஏற்கனவே சுகுணா சிக்கனின் பதப்படுத்தும் தொழிற்சாலை மடத்துக்குளம் தாண்டி வயலூர் அருகில் அமைந்திருக்கும் நிலையில் நம்ம ஏரியாவில் கொஞ்சம் பிரபலமாக இருக்கும் VKS பாம்ஸ் நிறுவணமும் கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையை மடத்துக்குளம் அருகில் கட்டி வருகின்றனர். அதே போல சாந்தி சிக்கன் நிறுவணமும் அதே ஏரியாவில் தொழிற்சாலை அமைத்து வருகின்றனர். ஆக முட்டை கோழிக்கு நாமக்கல் பிரபலமாக இருப்பதைப் போன்று வருங்காலத்தில் பிராய்லர் கோழிக்கு உடுமலைப்பேட்டை பிரபலமாக மாறலாம் (நீங்கள் சென்னையில் இருந்தால் ஏதற்கும் நீங்கள் கோழி வாங்கும் போது அது எங்கிருந்து வருகிறது என்று கேட்டுப் பாருங்கள். நம்மூராக இருக்கலாம்)

-------------------------------------------------------------------------------------------

வருசா வருசம் தீபாவளி பொங்கல்னு தவறாம வரும் பண்டிகையைப் போல தவறாமல் யாராவது திருமூர்த்தி மலையில் விழுந்து உயிர் தயாகம் பண்ணிட்டேயிருக்காங்க. இப்போது மலையில் ஒரளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதால் சமீப காலமாக ஏதும் உயிர் இழப்பு இல்லை. ஆனால் சில நாட்களுக்கு முன் பெதப்பம்பட்டியில் உள்ள பாலிடெக்னிக்கில்(புதுசா ஆரம்பித்தது) சில மாணவர்கள் திருமூர்த்தி அணையில் குளிப்பதற்கு கட் அடித்துவிட்டு வந்தார்கள். அணைப்பகுதியில் குளித்த இரண்டு மாணவர்கள் சேற்றில் சிக்கி இறந்தார்கள். கலெக்டர் நேரில் வந்து பார்தது Boat house பகுதிக்கு முள்வேலி போட சொல்லிவிட்டார். படகு சவாரி செய்பவர்கள் மட்டும் சீட்டு வாங்கினால் தான் வேலியை தாண்டி செல்ல முடியும். இனி வருடம் முழுவதும் அணைக்கு செல்ல முடியாது. கிட்டதட்ட ஒரு ஆறுமாதம் அருவியில் அதிகமா தண்ணீர் வரும் என்பதால் அங்கேயும் செல்ல முடியாது...கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் பல உயி்ர்களை காப்பாற்றும் என்பதால் மகிழ்ச்சியே...(ஓவர் சென்டிமென்டா இருக்கா...)

-------------------------------------------------------------------------------------------

ஒரு மத்தியான நேரத்தில பஸ் ஸ்டாண்ட் காந்திராம்ஸ் மாடில டிபன் சாப்பிட்டு இருக்கும் போது அதே டேபிள்ல சாப்ட்வேர் ஆள் மாதிரி ஒருத்தர் லோக்கல் ஆள் ஒருத்தரும் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். எனக்கு நம்ம வாடிக்கையாளர் ஒருவர் கூப்பிட்டபோது நான் 'உடுமலை.காம்மிலிருந்து சிதம்பரம் பேசுகிறேன்' என்று பேசியதை பார்த்து நான் பேசியதும் உடுமலை.காம்மை பற்றி கேட்டார். நமக்கு செலவில்லா விளம்பரம் அல்வா சாப்பிடற மாதிரி.அதனால உடுமலை.காம்மைப் பற்றி நல்ல விளம்பரம் ஒன்று கொடுத்தேன். பின்பு அவரைப் பற்றியும் கூறினார். தான் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் ஒரு மாதம் விடுமுறையில் வந்திருப்பதாகவும் கூறினார். நிறைய கேள்வி கேட்டார்.நிறைய பேசினார். பின்பு ஒரு தோட்டம் வாங்லாம் என்றிருப்பதாகவும் கூறி நீங்களும் தோட்டம் வைத்திருப்பதால் பராமரிப்பு பற்றி கேட்டார். நான் ஓப்பனாக "உங்கள் வீட்டில் யாராவது பார்ப்பதற்கு இருந்தால் மட்டுமே தோட்டம் சரி இல்லையென்றால் நிச்சயம் ஒத்துவராது. அதுவும் உரிமையாளர் அமெரிக்காவில் இருக்கிறார் என்றால் கேட்கவே வேண்டாம். பக்கத்து தோட்டக்காரர் முதல் நிறைய துன்பங்கள் வரும். அதெல்லாம் இங்கேயிருந்து பார்க்க வேண்டிய சொத்து. இப்போதைக்கு வேண்டுமானால் சிறிய பட்ஜெட்டில் வீடுகள் வாங்கிப் போடுங்கள். நீங்கள் இந்தியாவுக்கு வந்தபின்பு அதை நல்ல விலைக்கு விற்று பின்பு தோட்டம் வாங்கலாம்" என்று கூறி விட்டு அடுத்த விசயத்துக்கு தாவினேன். சிறிது நேரத்தில் விடைப்பெற்றேன்.
அடுத்த நாள் மதியம் சாப்ட்வேர்காரருடன் சாப்பிட்டு கொண்டுயிருந்தவர்(புரேக்கர்) நமது கடையில் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு எப்படியே தேடி கண்டுப்பிடுத்து "என்ன தம்பி இப்படி என் வியாபாரததை கெடுத்தீட்டிங்க. வரும் திங்கட்கிழமை கிரயம் வைச்சுக்கலாம்னு சொன்னவர் இப்ப தோட்டம் வேண்டாம் வீடு பார்க்கலாம்ங்கிறார். XX லட்சம் ரூபாய் வியாபாரத்தைக் கெடுத்தீட்டிங்ளே...நல்லா இருங்க தம்பி என்று சாபம் விடும் ஸடைலில் சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டார். வருத்தத்துடன் இனிமேல் அடுத்தவர் விசயத்தில் மூக்கை நுழைக்ககூடாது என்றும் நமக்கு சம்பந்தம் இல்லாதவைகளைப் பற்றி கருத்து சொல்லக்கூடாது என்று 12வது முறையாக முடிவெடுத்துள்ளேன். பார்க்கலாம் :)

*****************************************************************************
ரயில்வே பாலம் வேலைகள் ஓரளவு வேகத்தில் நடக்கிறது. மீட்டர் கேஜ் பாதைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

******************************************************************************
பள்ளபாளையம் ஆனந்த விநாயகர் கோயில் மற்றும் சுடலையாண்டர் கோயில் ஆகியவற்றில் ஓரே இரவில் கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து திருடினார்கள்
*******************************************************************************
பாராளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மேலும் உடுமலைப்பேட்டை தொகுதி இரண்டாக பிரிவதைத் தொடர்ந்து இந்த தடவையும் வெற்றி பெற வேண்டும் என்ற தீவிரத்துடன் அதிமுகாவினர் இப்போதே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
*******************************************************************************
திருப்பூரில் தொழிலாளர்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. நம்ம ஊருக்கே கிட்டதட்ட பத்து பஸ்கள் வருகின்றன ஆட்களை கூட்டி செல்வதுக்கு. அது கொழுமம் வரை செல்கிறது. கொழுமம் எங்கிருக்கிறது திருப்பூர் எங்கிருக்கிறது????
*******************************************************************************
பழனி பொள்ளாச்சியைக்காட்டிலும் நம்ம ஊரில் மழைக் குறைவு. நல்ல காலம் இரண்டு அணைகளிலும் ஓரளவு தண்ணீர் இருக்கிறது. கிணற்று நீரை மட்டுமே நம்பி இருப்பவர்களின் விவசாயம் இன்னும் இரண்டு மாதம் தாக்கு பிடிப்பதே கஷ்டம்தான்
*******************************************************************************
நம்ம ஊரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இது வரை பொள்ளாச்சியுடன் இருந்தது அதனால் பதிவு எண் TN 41 என்று ஆரம்பிக்கும். இப்போது அது திருப்பூருட்ன் இணைத்துவிட்டார்கள். அதனால் இப்போது நம்ம ஊர் பதிவு எண்TN 42 இல் ஆரம்பிக்கிறது
******************************************************************************
மின்மயான வேலைகள் கிட்டதட்ட முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் துவக்கப்படலாம்
******************************************************************************
இன்னும் இருக்கிறது...சில நாட்களில் அடுத்த பதிவு

Wednesday, August 26, 2009

ஸீன் காட்டி சீட்டிங்!

''ள்ளிக்கூடத்துல படிக்கும்போதே கோடி கோடியா சம்பாதிக்கணும்னு அந்தாளுக்கு வெறி. அந்த வெறி முப்பத்தெட்டு வயசுலேயும் தீப்பொறியா இருந்திருக்கு. திட்டமிட்டு வேலை செஞ்சதால, குறுகிய நாட்கள்ல இருநூற்றைம்பது கோடி ரூபாய் சம்பாதிக்கிற அளவுக்கு உயர்ந்திருக்காரு...'' என்று 'பில்டப்' கொடுத்த போலீஸார், கடைசியில்... ''அந்தாளு இப்போ எங்க கஸ்டடியில!'' என்று சொல்லவும், ''அடடா... விவகாரம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் போலிருக்கே!'' என்று இந்த கேஸை விசாரித்து வரும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டீம் முன் ஆஜரானோம்.

''சின்ன மீனுன்னு நினைச்சு விசாரணையில இறங்கினோம். கடைசியில அது திமிங்கிலமா இருக்கு...'' என்று ஆச்சர்யம் விலகாமல் கேஸ் பற்றி விரிவாகப் பேசி னார்கள்.

''உடுமலை சுத்துவட்டாரத்துல நலிவடைஞ்சு போன நூல், பேப்பர் மில்லுங்க ஏராளமா இருக்கு. கோடீஸ் வரனா ஆகியே தீரணும்னு கங்கணம் கட்டித் திரிஞ்சுக்கிட்டு இருந்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன், நலிவடைஞ்ச அந்த மில்களை தானே நடத்துறதாகவும், அதுக்கு ஒரு அமௌண்ட் கொடுத்திடு றேன்னும் சொல்லியிருக்கான். இதை நம்பி, பதினைஞ்சுக்கும் மேற் பட்ட மில்காரங்க, அவன் பொறுப்புல மில்களை ஒப்படைச்சுட்டாங்க.

இந்த மில்லில் உற்பத்தி செஞ்ச பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள நூலை, இல்லாத ஒரு கம்பெனிக்கு அனுப்பியிருக்குறதா போலி டாக்குமென்ட் தயாரிச்சுருக்கான். அந்த நூலை கம்பெனி பெற்றுக் கொண்டதாகவும், பத்து கோடி ரூபாய்க்கான செக்கையும், உறுதி மொழிப் பத்திரத்தையும் அவங்க அனுப்பியிருக்கிற தாகவும் டாக்குமென்ட் ரெடி பண்ணியிருக்கான். 'பத்து கோடி ரூபாய் என் கம்பெனிக்கு வர வேண்டி இருக்குது. இந்த டாக்குமென்ட்டை வச்சுக்கிட்டு, அந்த கம்பெனி கிட்ட இருந்து பணத்தை வசூல் பண்ணிக்கங்க. எனக்கு அமௌண்டைக் கொடுத்திடுங்க'ன்னு வங்கி அதிகாரிகள்கிட்டச் சொல்லி கோடிக்கணக்கான பணம் வாங்கியிருக்கான். இதைப் போல ஏராளமான போலி கம்பெனிகளை காட்டி இருநூற்றைம்பது கோடி ரூபாய் வரை பணம் சம்பாதிச்சுருக்கான். இந்த தகவல் ஒரிஜினல் மில் நிர்வாகிகளுக்குத் தெரிஞ்சதும், அவங்க பதறிக்கிட்டு எங்ககிட்ட வந்தாங்க.

சீனிவாசன் வாங்கியிருக்குற சொத்து, பேங்குல இருந்து எத்தனை கோடிக்குப் பணப்பரிவர்த்தனை நடந்திருக்குங்குற தகவலை எல்லாம் ஒரு மாசமா சேகரிச்சோம். இந்தத் தகவல் எங்களையே கிறுகிறுக்க வைத்தது. சீனிவாசனுக்கு குதிரைன்னா ரொம்பப் புடிக்கும். அதனால வட இந்தியாவுல இருந்து இருநூறு குதிரை வாங்கியிருக்கான். ஒரு குதிரையோட ரேட் குறைஞ்சபட்சம் ஏழு லட்சம் ரூபாய். வீட்டுல இருந்து அடுத்த மாநிலங்களுக்கு ஹெலிகாப்டர்ல போறதுக்கு ஆசைப்பட்ட சீனிவாசன், சில ஹெலிகாப்டர் கம்பெனிகள்ல கொட்டேஷன் வாங்கியிருக்கான். அது தொடர்பான டாக்குமென்ட்டை கைப்பத்தியிருக்கோம். 'அயன்,' 'படிக்காதவன்' படங்களோட கோவை மாவட்ட விநியோகஸ்தராகவும் இருந்தி ருக்கான். சமீபத்துல தாய்லாந்து போயிட்டு ஒரே நாள்ல நாற்பது லட்சம் ரூபாய் செலவு செஞ்சுருக்கான்.

சீனிவாசன்கிட்ட கோடிக்கணக்குல ஏமாந்து போயிருக்குறது மத்திய அரசு கன்ட்ரோல்ல இருக்குற ஒரு பேங்க்தான். அது போல, இவ்ளோ பெரிய நஷ்டத்தை அந்த கம்பெனி எதிர்பார்க்கல. அந்த கம்பெனியில இருந்து முக்கிய அதிகாரி ஒருத்தரு ராஜினாமா செஞ்சுருக்காரு. இன்னும் பல அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக் கும்னு நினைக்கிறோம்...'' என்று சொன்னார்கள். போலீஸார் தேடுவதை அறிந்ததும் கோர்ட்டில் சரணடைந்து விட்டார் சீனிவாசன். அவர் வளர்த்து வந்த குதிரைகளும் அவருடைய ஆட்களால் கேரளாவுக்கு 'ஷிப்ட்' செய்யப் பட்டு விட்டது. சீனிவாசனுக்கு மோசடியில் துணையாக இருந்த வெங்கடாசலபதி, செல்வக்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

'இத்தனை கோல்மால்களையும் அரசியல் தொடர்பு இல்லாமல் சீனிவாசன் செய்திருக்க முடியுமா?' என்ற சந்தேகமும் போலீஸார் மத்தியில் ஏற்பட்டிருக்க... அது தொடர்பாகவும் விசாரித்து வருகிறார்கள்.

விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்த வந்த போது சீனிவாசனிடம் பேசினோம். ''என்னைப் பத்தி என்ன வேணும்னாலும் எழுதிக்கங்க. இந்த வழக்குல இருந்து நான் நிச்சயம் வெளியில வருவேன். வந்த பிறகு நடந்த உண்மைகளை எல்லாம் சொல்வேன்...'' என்று அசராமல் சொன்னார்.

வாழ்க்கையில்... தான் கொண்ட 'கோடி' லட்சியத்தை அடைந்துவிட்ட சீனிவாசன், சென்ற பாதையில் மட்டும் தவறி விட்டார்!

Junior விகடனில் வந்த கட்டுரை: நன்றி: Junior விகடன்

Saturday, August 22, 2009

நம்ம ஊரு நல்ல ஊரு

தாஜ் தியேட்டர் வடக்கே சிக்னல்.
சபாஷ் சரியான போட்டி.
HDFC Bank coming to our town shortly.
தளி ரோட்டில் traffic
மத்திய பேருந்து நிலைய சிக்னல்

மத்திய பேருந்து நிலைய சிக்னல்
தளி ரோட்டில் சிக்னல்

வெறும் புகைப்படம் மட்டுமே..விபரங்கள் மற்றொரு பதிவில்
உங்கள் கருத்துக்களையும் சொல்லிட்டுப் போங்க


Thursday, August 6, 2009

வளர்ச்சியும் வீழ்ச்சியும்

கடந்த சில வருடங்களாக வளர்ச்சிடைந்த நிறுவனங்களும் வீழ்ச்சியடைந்த நிறுவனங்களைப் பற்றிய பதிவு இது...

வளர்ச்சியடைந்தவைகள்

சுகுணா பவுல்டரி:

சிறிய நிலையில் உடுமலைப்பேட்டையில் ஆரம்பித்த இந்த நிறுவனம் இன்று ஆயிரம் கோடியை தாண்டி மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது...இன்று சிக்கன் என்றாலே சுகுணா என்ற அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. ஆனால் நம்ம ஊர் மக்கள் வழக்கம் போல "அவுங்க எப்படி வளந்தாங்கனு எனக்கு தெரியாதா...அதெல்லாம் பூரா சசிகலா காசு" என்று புறம் பேசுகிறார்கள். அடப்பாவிகளா... நம்ம ஊர் மக்களை பார்த்தபின்பு தானே என்னவோ உடுமலை நாராயணகவி "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்" என்ற பாடல்வரிகளை எழுதியுள்ளார் போல.

ராகம் பேக்கரி:
அநேகமாக தமிழ்நாட்டில் உள்ள சிற்றூர்களில் உள்ள எந்த பேக்கரியையும் விட modern equipments இவர்களிடம் உள்ளது. கொஞ்ச காலம் முன்பு ராயல் பேக்கரிக்கும் ராகம் பேக்கரிகும் இடையே கடுமையான போட்டி இருக்கும். ஆனால் இப்போது ராகம் பேக்கரியே தனி்க்காட்டு ராஜாவாக திகழ்கிறது. மூன்றாவது மாடியில் பெரிய ஜெனரேட்டர் ஒன்றை நிறுவியுள்னர். இரண்டாவது மாடியில் பெரிய Icecream பார்லர்க்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. (ஐஸ்கீரிம் சாப்பிடறதுக்கு தனியா இரண்டாவது மாடியில ஏன் பார்லர் வைக்கிறாங்க...நல்லா இருந்தா சரி..ஐஸ்கீரிம சொன்னேன்)

ஜோஸ் Jewellery
வந்தோரை வாழவைப்பது நம்ம ஊர். நம்ம வீதிகாரன், அடுத்த தெருக்காரன் சொந்தகாரன் இவங்க வைச்ச நகைக்டையெல்லாம் காத்து வாங்க..கேரளாவில் இருந்து வந்து தளிரோடு தாமு பில்டிங்கில் ஆரம்பிச்ச நகைக்கடையில் நம்ம ஊர் மக்கள் வாங்கி தள்ளுராங்க. அப்பறம் என்ன இன்னொரு கடை ஜோஸ் வெள்ளிமாளிகைனு தளிரோட்டிலே ஆரியபவன் எதுக்கால ஆரம்பிச்சுட்டாங்க. (நம்ம ஊரு பாலிஸி "எங்கிருந்தாலும் வாழ்க யாராயிருந்தாலும் வாழ்க்...)

லதாங்கி:
மீண்டும் வெளியூர்காரர்கள். ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர்கள். தாஜ் தியேட்டர் கட்டிய இடத்தில் இரண்டு லதாங்கி தியேட்டர் கட்டலாம். அவ்வளவு குறுகிய இடத்தி்ல் கட்டப்பட்டது லதாங்கி. ஆனால் என்ன? இன்று உடுமலை நகரத்தில்உள்ள அனைத்து (கல்பனா அனுசம் தாஜ் லதாங்கி) தியேட்டர்களும் இவர்களின் நிர்வாகத்தில் உள்ளது.

வீழ்ந்தவர்கள்:
ஓகே என்று வாழ்ந்தவர்கள் இன்று வீழ்ந்த நிலையில் அவர்களைப் பற்றி பேசினால் நன்றாக இருக்காது. அதனால் அவர்களின் பெயர்களை மட்டும் எழுதுகிறேன்.

மணி விலாஸ் ஓட்டல் - தளி ரோடு
ஊரைச்சுற்றி உள்ள நிறைய நூல் மில்களும் , அதன் முதலாளிகளும், தொழிலாளிகளும்
விஜயதீப் துணிக்கடை - பழனி ரோடு
உடுமலைப்பேட்டை ரயில் நிலையம் :)

இது ஒரு முழுமையான பட்டியல் இல்லை. இந்த பட்டியலில் சேர்க்க தகுதியான பெயர்களை நீங்களும் கூறலாம்

Thursday, July 30, 2009

நடந்ததும் நடக்கப்போவதும்

ஊரே அகலமானதாக தோன்றுகிறது. ஆமாம் நம்ம ஊரில் அனைத்து சாலைகளில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு பளிச் என்று காணப்படுகிறது நம்ம உடுமலைப்பேட்டை. பேருந்து நிலையத்தின் முன் உள்ள பழக்கடைகள், கல்பனா வீதியில் உள்ள கடைகள் உள்ள ஊரில் உள்ள எல்லா ஆக்கிரமிப்புகளும் காலி...(அதெல்லாம் சரி இன்னும் நாள் இப்படி இருக்கும்?. மறுபடியும் வரத்தானே போகுது...)

ரூம் போட்டு உட்காந்து யோசிச்சு பார்த்தாலும் தெரியல....ஏதுக்கு தாஜ் தியேட்டர்க்கு வடக்கே சிக்னல் வைச்சிருக்காங்கனு!

250 கோடி ஏமாற்றிய உடுமலை வாலிபர்கள் கைது - தினமலரில் செவ்வாய்கிழமையன்று வந்த செய்தி. இதைப் பற்றி விபரங்கள் வந்தவுடன் தனியாக ஒரு பதிவு போடுகிறேன். (உடுமலைப்பேட்டைல இருந்தா பெரிசா சொத்து சேக்கமுடியாதுனு யாருப்பா சொன்னது.... நன்றாக திட்டமிட்டு உழைத்தால் கண்டிப்பாக முடியும். இவர்களைப் போல...


நன்றி: தினகரன்

சில சுவாரசியங்கள்
* இவர்கள் மோசடி பண்ணிய பணத்தில் சுமார் 60 உயர்ரக குதிரைகள் வாங்கினார்கள் (சுமார் மதிப்பு 2 கோடி)
* 15 கார்கள் வாங்கியுள்ளார்கள். (அதுவும் கடனுக்குதான்)
* Helicopter வாங்குவதற்கு பேரம் நடந்துள்ளது
* ஏதோ ஒரு நலிந்த வங்கியையும் வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளனர் (பார்கக செய்தி)
* இதில் புகைப்படத்தில் முன்றாவதாக உள்ள செல்வக்குமார் கல்லூரியில் எனக்கு இரண்டு வருடம் Junior.
* இரண்டு வருடங்களாக இவர்களுடைய வளர்ச்சியை உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த தொழிற்துறையினர் ஒருவித ஆச்சரியத்துடனே பார்த்தனர்.


இனி உடுமலைப்பேட்டையில் ஒவ்வொரு வீதியும் வெப் கேரமா மூலம் கண்காணிக்கப்படுமாம். நகராட்சி தலைவர் பேட்டியில் கூறியுள்ளார்.

சில நாட்களாக நகரில் உள்ள அனைத்து கடைகளும் குறிப்பாக உணவகம் மற்றும் தேநீர் விடுதிகளை கண்டிப்பாக பத்து மணிக்கு முன்பாக மூடவேண்டும் என காவல் துறையினர் உத்திரவு போட்டுயுள்ளனர்.

Wednesday, July 22, 2009

slice of life @ udumalpet

நீங்கள் உள்ளுர்லேயே பிறந்து வளர்ந்து கொஞ்சம் நட்பு வட்டாரங்களுடன் பழக்க வழக்கம் இருந்தால் உங்கள் நடமாட்டம்/நடவடிக்கை ஏதேனும் இரு கண்களால் கண்காணிக்கப்பட்டே தீரும். நம்ம ஊரில் நிறைய பேருக்கு தங்கள் வீட்டின் /கடையின் திண்னையில் உட்காந்து கொண்டே யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதை பார்ப்பதே வேலையாக வைத்துக் கொண்டுயிருக்கிறார்கள். அது மட்டுமில்லாது அடுத்தமுறை அவர்களை சந்திக்கும்போது மறக்காமல் அதைப்பற்றியும் கேட்க தவறுவதில்லை. "சிதம்பரம் போன வாரம் சனிக்கிழமை சாயந்திரம் E.Bக்கு வடபுறம்(அது எங்கள் வீடு இருக்கும் ஏரியா) நீங்க பைக்ல போய்ட்டு இருந்தீங்க..நான் எதுக்கால வந்தேன் ஆனா நீங்க பாக்கல என்பதை போன்ற கேள்விகளை நான் நிறைய எதிர்கொண்டுயிருக்கிறேன். நீங்கள் வழக்கமாக உபயோகப்படுத்தும் வண்டியை விட்டு வேறு எதிலாவது நீங்கள் போனால் அதையும் மறக்காமல் இரண்டு வாரம் கழித்து கூட் உங்களை பார்ககும் போது கேட்க மறக்கமாட்டார்கள். இதில் நன்மையும் தீமையும் சேர்ந்தே இருக்கிறது.

எங்கள் அலுவலகத்திற்கு தேவையான மென்பொருளை கோவையில் இருக்கும் ஒரு நிறுவனம் செய்து வந்தது. அதுசம்பந்தமாக மேலும் விபரங்களை சேகரிக்க (Data collection) அந்நிறுவனத்தி்ல் வேலை பார்க்கும் நம்ம ஊரைப் சேர்ந்த என்னுடைய Batchmate பெண் நம்ம அலுவலகத்திற்கு வந்தார். அவரது சொந்த ஊரான குடிமங்கலத்துக்கு போக தன்னை பேருந்து நிலையத்திற்கு பைக்கில் கொண்டு வந்து விடுமாறு அவராக கேட்டுக்கொண்டதால் (நம்புங்கப்பா!!!) அவரைக் கொண்டுபோய் விட்டேன். விட்டுவிட்டு அலுவலகம் வருவதற்குள் 5 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கல்லூரியில் வேலை செய்யும் நண்பனிடம் இருந்து போன். "நீ ஒரு பெண்ண கூட்டிட்டு பைக்ல போய்ட்டு இருக்கிறயமா?" என்று கேட்டான். செய்தி 5 நிமிடத்தில் 5 கிமி பறந்துள்ளது. என்னைத் தெரிந்த அவனுக்கு தெரிந்தவர்கள் யாரோ இந்த "பத்த வைச்சுட்டையே பரட்ட" ஸ்டைலில் பத்தவெச்சுட்டார்கள். அது போக ஒரு வாரத்தில் ஆறு ஏழு பேர் நேரடியாகவே கேட்டார்கள். மிகச்சாதாரண விசயத்துக்கு ஒவ்வொருவரிடமும் விளக்கம் சொல்ல சலிப்பாகவே இருந்தது. ரொம்ப நாளாக சேர்த்து வைத்த ஒரு Image கை கொடுத்தது. "அது நான் இல்லை. என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாதா" என்று திருப்பி கேட்டேன். பார்த்தவர்களுக்கே சந்தேகம் வந்து விட்டது. நமக்கு விளக்கம் சொல்லும் தொல்லை விட்டது.

அதே நேரத்தில் நன்மையும் இருக்கிறது. என் நண்பன் ஒருவன் காரில் விபத்தில் சிக்கிக்கொண்டான். விபத்து நடந்த இடத்தில் இருந்தவர் ஒருவர் ஹதாராபாத்தில் இருக்கும் என் நண்பனை அழைத்து, பெயர் தெரியவில்லை. ஆனால் 9852ல் (நம்ம கார் நம்பர். நண்பர்கள் வட்டத்தில் கொஞ்சம் பிரபலம்!) இவரைப் பார்த்திருக்கிறேன் என்று விபத்தைப் பற்றி கூறினான். திண்டுக்கல்லில் இருந்த என்னை அழைத்த அந்த நண்பன் விசயத்தை கூறினான். நான் வெளியூரில் இருந்ததால் வேறொரு நண்பனை அழைத்த சம்பவயிடத்திற்கு உடனே சென்று பார்க்குமாறு கூறினேன். குட்டைக்கு அருகில் விபத்து நடத்த இடத்திற்கு நண்பன் செல்லும் போது விபத்து நடத்து 5 நிமிடங்களே கடந்துயிருந்தது. இதுமட்டுமில்லாது விபத்தில் சிக்கிய நண்பனின் தந்தைக்கு தெரிந்தவர் தந்தைக்கு தகவல் சொல்ல அவரும் வந்துவிட்டார். The Power of Social Networking!??



சமீபத்தில் உடுமலைப்பேட்டையின் மேற்குப்பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை சந்தித்தேன். நல்ல படிப்பு நல்ல வசதி நல்ல நற்பண்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளவர். சுமாராக 33 வயது இருக்கும். பேச்சுவாக்கில் அவரது தினசரி நடவடிக்கைகள் பற்றி பேசினோம்.
காலை 7 மணி: தூக்கம் கலைதல்
8 மணி: குளித்து விட்டு காலை உணவு
9 மணி: UKG படிக்கும் மகளுக்கு டாட்டா சொல்லி ஸ்கூல் வேனில் ஏற்றுதல் (நீங்கள் நினைப்பதைப் போல இதெல்லாம் ஒரு வேலையானு கேட்டேன். உங்களுக்கு திருமணமாகி நீங்களும் பள்ளிக்கு அனுப்பும் போது தெரியும் என்று கூறி என் வாய்யை அடைத்துவிட்டார்.)
10 மணி: தினசரிகளை புரட்டி பார்ப்பது
11மணி: ஊருக்குள் இருக்கும் டீக்கடைக்கு சென்று ஒரு திருட்டு தம் மற்றும் டீ
1 மணி: மதியம் சாப்பாடு
2 மணி: குட்டி தூக்கம்
4 மணி: அருகில் இருக்கும் அவரது தோப்புக்கு சென்று மேற்பார்வை
5.30 மணி : வீடு திரும்புதல்
அப்பறம் பள்ளியில் இருந்து திரும்பிய மகளோடு விளையாட்டு, படிப்பு பின்பு கொஞ்சம் டீவி இரவு பத்து மணிக்கு தூக்கம்.... வாரம் ஒரு தடவை டவுனுக்கு வந்து ஒரு சினிமா. அவ்வளவுதான்.

இதற்கும் கோவை PSGல் MBA படித்தவர். சுமாராக மாதம் 2 லட்சம் வருமானம் (செலவு
என் கணிப்பப்படி 30ஆயிரம் இருக்கும் + வருமான வரியென்றால் என்ன என்று கேட்கும் நிலையில் இருக்கிறார். அத்தனையும் tax free). எனக்கு ஆச்சிரியமாக உள்ளது. உங்களுக்கு பொறாமையாக இருக்கிறதா?


ஏர்டெல் postpaid வைத்திருக்கும் நான் சமீபத்தில் அலுவலக உபயோகத்திற்க்காக இன்னொரு இணைப்பு பெற அந்நிறுவனத்தின் ஷோருமிற்க்கு சென்றேன். கூடுதல் இணைப்பைப்(Addon) பற்றி கேட்டதற்கு தற்போது உடுமலைப்பேட்டைக்கு (மற்றும் நமது ஊரைப்போன்ற பல சிறுநகரங்களுக்கும்) Postpaid இணைப்பு வழங்கப்படுவதில்லை என்றும் வேண்டுமென்றால் ப்ரிபெய்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். காரணம் யாரும் சரியாக பில் கட்டுவதில்லை என்றும் கூறினார். அதன்படி பார்த்தால் சென்னை கோவை போன்ற நகரங்களில் எல்லாம் ஒழுங்காக பில் கட்டுராங்களா? ஒப்பிட்டு பார்த்தால் பெருநகரங்களைவிட நம்ம ஊர்காரங்க சரியாகத்தான் பில் கட்டுகிறார்கள். ஆனால் இந்த தனியார் நிறுவனங்களுக்கு நம்மைப் போன்ற சிறுநகரங்களை எப்போதும்மே ஒருமாதிரி வேண்டாவெறுப்பாகத்தான் பார்க்கிறார்கள். Credit card Personal Loan போன்றவற்றை எப்போதும் நம்ம ஊர்களுக்கு தருவதே இல்லை... என்ன கொடுமைசார் இது?

Thursday, July 16, 2009

கொஞ்சம் காத குடுங்க...


இப்ப நான் சொல்ல போற விசயம் கொஞ்சம் ரகசியமானது. படிக்கற உங்களுக்கு எனக்கும் தவிர யாருக்கும் தெரியாது. அதனால கொஞ்சம் ரகசியமா வைச்சுக்கோங்க...


1) கொங்கு மண்டலத்தின் செல்வாக்கான அரசியல்வாதி ஒருவர் சமீபத்தில் தனது scorpioவை விட்டு 19 லட்சம் மதிப்புள்ள வேறொரு காருக்கு மாறிவிட்டார். நண்பர் ஒருவர் தனிமையில் அதைப்பற்றி கேட்டபோது "ஆமாங்க சும்மா 50, 100னு பிக்பாக்கெட் அடிக்கரவன் எல்லாம் scorpioல வரான்.


நாமலும் அது வந்தா வித்தியாசம் வேண்டாமா என்று சொல்லியிருக்கிறார். (அதாவது 100ரூபாய் பிக்பாக்கெட் அடிப்பவனுக்கும் கோடி கோடியாய் அடிப்பவனுக்கு வித்தியாசம் வேண்டுமே அதனால் தான் காரை மாற்றிவிட்டார் போல)

2) அவர் உடுமலைப்பேட்டையின் தெற்குபகுதியின் மலையடிவார கிராமத்தின் பெரும் பண்ணைகாரர். சும்மா உட்காந்து சாப்புடாலே ஏழு தலைமுறைக்கும் வரும். அவ்வளவு சொத்துக்கு சொந்தகாரர். கேட்கவாவேணும் லொள்ளுக்கும் குசும்புக்கும்.... . தலைவருக்கு வீட்டில் வளர்க்கும் கோழி ஆடு போன்றவற்றை சாப்பிடவே பிடிக்காது. பின்ன? வனப்பகுதியில் அலைந்து திரியும் மிருகம் ஒன்று தான் அவருக்கு பிடித்த உணவு. அதுவும் அங்கேயே பிடித்து, சமைத்து சாப்பிடுவது தான் பிடிக்கும். என்னுடைய நண்பர் அவருக்கும் நண்பர். ரொம்ப நாளாய் அவரை கூப்பிட்டே இருந்தார். வாங்க பழகலாம் ஸாரி சாப்பிடலாம்னு. ஆமாம் அந்த மிருகத்தை பிடித்தால் 15 பேர் வரை சாப்பிடலாம். அதனால் இந்த மாதிரி நண்பர்களை கூட்டிட்டு தான் போவார் துரை. என்னுடைய நண்பர் ஒரு நாள் காலை அவருடன் வனப்பகுதிக்கு சென்றார். வனப்பகுதியை பாதுகாக்கும் தலைமை அதிகாரி வேறு ரொம்ப கண்டிப்பானவர் என்று அவர் கேள்விப்பட்டுள்ளார். மிருகங்களை வேட்டையாடி சால்மான்கானே தப்பிக்க முடியவில்லை. நாமெல்லாம் எங்கே என்று பயந்தபடியே சென்றார்.

நல்ல உயரமான பாறையில் பயங்கர சிரிப்புடன் பத்து பேர் கொண்ட கும்பல் ஏற்கனவே அங்கே கும்மாளம் அடித்து கொண்டிருந்தது. நண்பர் பயந்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தார். ஒரு அரைமணி நேரம் கழிந்த பின் யாரோ சிலர் பாறையில் ஏறி வருவது போல சத்தம் கேட்டது. எல்லாரும் சத்தம் வரும் திசையில் பார்த்தனர். இவருக்கு இதயமே நின்று விடும் போலிருந்தது. அங்கே நான்கு காவலர்கள் அதில் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து கொண்டுயிருந்தார்கள். நண்பர் நல்லா மாட்டிக்கொண்டோம் என்று நினைத்தார். மூன்று காவலர்கள் இருபதடி தூரத்திலேயே நின்று கொண்டார்கள். தூப்பாக்கியுடன் இருந்த காவலர் மட்டும் அருகில் பண்னைக்காரரை நோக்கி வந்தார். நமது நண்பருக்கு வேர்த்து விறுவிறுத்து போனது. காவலர் பண்னைக்காரர் அருகில் வந்து குனிந்து " இன்னைக்கி வீட்டில விருந்தாளிங்க வந்திருக்கிறாங்க அதனால அய்யா கறியை கொஞ்சம் சேர்த்து வாங்கிட்டு வரச் சொன்னார்" என்று அந்த காவலர் கிசுகிசு குரலில் சொல்ல நம்ம நண்பருக்கு அப்போது தான் உயிர் வந்தது. (நல்லா பாக்குறாங்கைய்யா வேலைய....)

3) மாநிலத்தில் மற்ற பகுதியில் எப்படியோ...நம்ம ஊரைப் பொறுத்தவரையில் இரண்டு கழகத்தின் பெரும்புள்ளிகள் ஆற்றின் கரையில் இருப்பதை அள்ளுவதில் கரைதேர்ந்தவர்கள்(ஒற்றுமையாக). இது கடந்த இருபது வருடமாக தொடர்கிறது. அதாவது ஆட்சியில் இருப்பவர்கள் அள்ள, எதிர்கட்சியில் இருப்பவர்கள் கையில் காசு. அதனால் யாரும் வாய் திறக்கமாட்டார்கள். கொஞ்ச நாள் முன்னாடி முரசடித்து கொண்டிருக்கும் நடிகர் கூட்டதின் உள்ளுர் தலைவர் இரண்டு கழகத்தின் தலைவர்களை தொடர்பு கொண்டு என்னையும் 'நமக்கு நாமே' திட்டத்தில் சேர்த்து கொள்ளுமாறு கேட்டார். அதற்கு ஒரு முக்கிய புள்ளி போனிலேயே "சின்னப்புள்ள தனமா இருக்கு. முளைச்சு மூனுஇல விடல அதுக்குள்ள பங்கு கேட்குதா உனக்கு. போய் வேலைப்பாரு" என்று திட்டிவிட்டதாக கேள்விப்பட்டேன்.

படிச்சுட்டு உங்கள் கருத்தையும் சொன்னால் நல்லாயிருக்குங்க....

Wednesday, July 15, 2009

உடுமலை ஒளிர்கிறது - 3 சிக்னல்களால்!!!

ஒரு கிராமத்துப் பழமொழி ஞாபகம் வருகிறது. "அறுக்கமாட்டான் இடுப்புக்கு 57 கத்தியாம்". அந்த மாதிரி சின்ன ஊருக்கு 3 இடங்களில் ஓரே நேரத்தில் சிக்னல்கள் வரப்போகிறது. புதிய பேருந்து நிலைய ரவுண்டனா, தளி ரோடு பொள்ளாச்சி-பழனி ரோடு சந்திப்பில் ஒன்று மற்றும் கன்னிகா பரமேஸ்வரி பள்ளிக்கு எதிரில் ஒன்று என மூன்று சிக்னல்கள் அமையப் போகிறது.

அதென்னமோ இந்த பொள்ளாச்சி பழனி ரோட்டில் தான் எல்லாம் அமைகிறது. ஊரைச் சுற்றி ஆயிரத்தெழு கிராமங்கள் நாலாபுறமும் இருந்தாலும் கொஞ்ச நாள் முன்பு வரை எல்லா பெட்ரோல் பங்க்களும் இந்த பொள்ளாச்சி பழனி ரோட்டில் தான் இருந்தன. ஊரில் எந்த பகுதியில் இருந்தாலும் இங்கு வந்து தான் பெட்ரோல் போட வேண்டும். இப்போது பரவாயில்லை. தளி ரோட்டில் அருகருகே 3 பங்க்குள் துவங்கியிருக்கிறார்கள்.


பத்து நாள் முன்பு இனி ஒரு வாரம் மழை பெய்யவில்லை என்றால் நம்ம ஊருக்கு தண்ணீர் பஞ்சம்(நம்ம ஊரு வரலாற்றில் முதன் முதலாக....) வந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது திருமூர்த்தி அணை. யார் செய்த புண்ணியமோ (நான் இல்லீங்க...) சுமாராக மழை வந்து காப்பாற்றி விட்டது. ஆனாலும் இதயம் பலவீனமானவர்கள் யாரும் திருமூர்த்தி மலை பக்கமோ அணைப்பக்கமோ போகாதீங்க. காய்ந்து கிடக்கும் (சில நாட்களுக்கு முன் வரையான நிலைமை) அருவியையும் குளமாகிப் போன அணையையும் பார்க்க தைரியம் வேண்டும்.

கடந்த வார தினமலரில் நம்ம ஊரில் காவல் நிலையத்தில் யாரும் வழக்கே பதிவு செய்வதில்லையென்றும் அனைத்தையும் பேசியே பைசல் செய்யகிறார்கள் கட்டப்பஞ்சாய்த்து நடக்கிறது என்றும் செய்தி வந்தது. அடுத்த நாளே திருப்பூர் மாவட்ட(ஆமாங்க இப்ப நாமெல்லாம் திருப்பூர் மாவட்டம்) எஸ்பி சாந்தி அவர்கள் நேரில் வந்து லெப்ட் ரைட் வாங்கி விட்டார்கள். அரண்டு விட்டனர் நம்ம ஊர் போலிஸ்.

quick update: நான் இந்த பிளாக்ல எழுதன நேரமே என்னவோ திருமூர்த்தி மலை அருவியில் நல்ல வெள்ளம் வருகிறது. பாதுகாப்பு கருதி குளிக்க தடை செய்யப்பட்டுயிருக்கிறது.